Wednesday, November 9, 2016

அலைபாயும் நெஞ்சங்கள் – சுதா ரவி


ஆணாதிக்க சமூகத்தில், ஆண்களால் பெண்களுக்கு நேரும் துன்பங்கள் பலவற்றை வாசித்திருப்போம்... இங்கே தடம் மாறிப் போன ஒரு பெண்ணால் அநீதி இழைக்கப் பட்ட நிகிலின் அலைபாயும் நெஞ்சம்...

தாய் தந்தை உடன்பிறந்தோர் உற்றார் உறவினர் கொண்ட சாதாரண சூழலில் அல்லாமல், சற்றே அசாதாராண குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்து, தனிமையில் பிள்ளைப் பருவத்தைக் கடந்து, அன்பான குடும்ப உறவுகளுக்காக ஏங்கி, அது திருமண வாழ்வில் வாய்க்கும் என்று நம்பி நாயகனைக் கைபிடிக்கும் ஸ்ருதியின் அலைபாயும் நெஞ்சம்....

இவ்விரு அலைபாயும் நெஞ்சங்களின் ஆற்றாமை... பிரிவு... ஊடல்... காதல்... புரிதல் இவைகளில் பயணிக்கும் நேரத்தில் நமது நெஞ்சங்களும் அந்த அலைகடல் போலக் கொந்தளித்து, நுரைத்துப் பொங்கி, சில பல காற்றழுத்த தாழ்வு நிலைகளைக் கடந்து, பிறகு இறுதியில் புயல் கரையைக் கடந்து ஆழ்கடலின் அழகிய அமைதியை தத்தெடுத்துக் கொள்கிறது.

பனை மரத்தில் பாதி உயரம் இருக்கும் நிகில் ஆரம்ப அத்தியாயங்களில், மனைவி ஸ்ருதியை நடத்தும் விதத்தில் நம்மிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொள்கிறான். ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் ஸ்ருதியிடம் முகம் கொடுத்து பேசாமல் ஆறு மாதங்கள் கடத்தி, பிறகு முதன் முதலாக அவன் அவளிடம் வேண்டுவது விவாகரத்து.

அவளின் குடும்பப் பின்னணி குறித்து ஏடாகூடமாய் அவளிடம் ஏதோ கேட்கப் போய், ஸ்ருதி விபத்தில் காயமடைந்து துபாயில் இருந்து மாமியாருடன் தாயகம் திரும்புகிறாள்.

அவன் விரும்பிக் கேட்ட விவாகரத்தை, மனமுவந்து அளித்துவிட்டு விலகிச் செல்லலாம் என்று என்னும் வேளையில், எம் ஸ்கொயருக்கு புத்தி வந்து விடுகிறது... (எம் ஸ்கொயர் பெயர் காரணம்... கதை வாசித்து தெரிந்து கொள்ளவும்)

இவ்வளவு நாட்களாக வெறுத்து ஒதுக்கிய மனைவி மீது திடீரென அன்பும் காதலும் போட்டியிட, கட்டிய மனைவியை கரெக்ட் பண்ண இந்த நிகில் ஆடும் ஆர்ஜே ஆட்டம்... அட்டகாசம்.

பிரச்சனைகள் சூழ்ந்திருக்கும் நேரத்திலும் வயிற்றுக்கு வஞ்சனை செய்யாமல் ஹல்வாவை அவன் விழுங்கும் அழுகுக்காகவே அவன் செய்த அநியாய அடாவடிகளை மன்னித்து விடலாம் போல... (ஆனாலும் ரீடர்ஸ்க்கு இப்படி சுடச் சுட திருநெல்வேலி ஹல்வா யாரும் குடுத்திருக்க மாட்டாங்க...)

இந்த இடத்தில் நிகிலின் அம்மா காயத்ரி பற்றி சொல்லியே ஆக வேண்டும்...

திரைபடங்களில் கலகலப்பான அம்மாவாக கலக்கும் சரண்யாவை ஒத்த கேரக்டர்... very enjoyable...

ஆரம்ப காட்சிகளில் பைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு தங்கி... நோயாளி வேடமிட்டு மகனை திருமணத்துக்கு சம்மதிக்க வைப்பது தொடங்கி இறுதியில் இருவரும் இணைவதற்கு வழி செய்யும் வரை... awesome characterisation…

ஸ்ருதியை அப்படி வெறுத்து ஒதுக்கும் அளவுக்கு நிகில் வாழ்வில் என்ன தான் நடந்தது?

அதை அறிந்து கொள்ள கதாசிரியர் நம்மை கேரளா குமரகம் அழைத்துச் சென்று, குளுகுளு பின்னணியில் நிகிலின் பார்வையில், அவனின் கடந்த காலத்தை சொன்னது மிகச் சிறப்பு.

நிகிலின் வாழ்வில் நிகழ்ந்தது என்ன?

ஸ்ருதியின் குடும்ப பின்னணி என்ன?

கதையை வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.

மிக அழகாக குடும்ப உறவுகளை, எதார்த்தமான பின்னணியில் சொல்லி இருப்பதால், கதையுடன் இணைந்து இசைவாகப் பயணிக்க முடிந்தது. நிகிலின் நண்பன் வழக்கறிஞர் மதியின் காமெடி அட்டகாசங்களில் சிரிப்பு டீச்சர் சுதா மிளிர்கிறார்.

ஆரம்ப காட்சியில் ஸ்ருதியை வாலு என்றும் கல்லூரியில் அவள் அட்டகாசங்கள் செய்யக் கூடியவள் என்றும் சொல்லி விட்டு, கதையின் ஓட்டத்தில் ஸ்ருதி கதாபாத்திரத்தை ஆழமான அமைதியான பெண்ணாகக் காட்டியிருப்பது சிறு நெருடல்.

கதையின் முதுகெலும்பான ஸ்ருதியின் பிள்ளைப் பருவம் மற்றும் நிகிலின் கடந்த காலம்... இரண்டுமே காட்சிப் படுத்தப் படாமல் அவரவர் வாய்மொழியால் சொல்லி இருப்பது பலம் என்றாலும் பலவீனமும் அதுவே.

மொத்தத்தில் அனைத்து சுவைகளும் நிரம்பிய குடும்பக் கதையை தொய்வில்லாமல் வழங்கியமைக்கு, வாழ்த்துக்கள் சுதா ரவி!

3 comments:

  1. ஹாய் ஹமீதா,

    என்ன சொல்ல..வஷிஸ்டர் வாயால பிரம்ம ரிஷி பட்டம் வாங்கின மாதிரி இருக்கு...உங்க விமர்சனம் பார்த்த பிறகு தான் எனக்கு கதை முடிச்ச சந்தோஷமே வருது....அருமையா கதாபாத்திரங்களையும் சரி,அவர்களின் குணாதிசயங்களையும் எடுத்து சொல்லி. கதையின் நிறை, குறைகளை உணர்த்தி ஒரு கதாசிரியருக்கு என்ன தேவையோ அதை எடுத்து கொடுத்து இருக்கீங்க..நீங்க சொன்ன சில விஷயங்களை நான் எடிட்டிங்கில் கவனமா பார்க்கிறேன்...நன்றி ஹமீதா...உங்க விமர்சனம் பார்த்த பிறகு மனசுக்கு நிறைவா இருக்கு..........

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய விமர்சனம் உங்களை மகிழ்வித்தது அறிந்து மிக சந்தோஷம் சுதா. நான் சுட்டிக் காட்டிய விஷயங்களை சரியான கோணத்தில் எடுத்துக் கொண்ட உங்களின் புரிதலுக்கு மனமார்ந்த நன்றிகள் தோழி. விரைவில் இக்கதை புத்தக வடிவில் வெளிவர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

      Delete