Wednesday, March 8, 2017

மகளிர் தின வாழ்த்துக்கள்

“தோழிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்...”

மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இவ்வாழ்த்தைப் பரிமாறிக்கொள்ள ஆசையாகத் தான் இருக்கிறது...

ஆனால், சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் இவ்வேளையில், பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான குரல்களையே அதிகம் கேட்க முடிகிறது என்பது வேதனையளிக்கிறது. பாலியல் வன்முறைகள் வெளிச்சத்திற்கு வந்து விடுகிறது. ஆனால், குடும்பத்திலும் வேலையிடத்திலும் நிகழும் மனரீதியிலான தாக்குதல்களை எந்தப் பிரிவில் சேர்ப்பது?

இன்றைய நாகரீக உலகிலும் பெண்கள் தங்களுக்கு உரிமையான சுதந்திரத்தை ஆண்களிடம் கேட்டுப் பெரும் நிலையே இருக்கிறது. இந்த நிலை மாறாத வரை, ஆணுக்கு பெண் மீதான கீழ்நோக்குப் பார்வை மறையப் போவதில்லை.

பெண், தனக்கான சுதந்திரத்தை தன்னில் தேடுவதே அவளின் முன்னேற்றத்துக்கான முதல் படியாக இருக்கும். ஆணால் பெண்ணுக்கு நேரும் துயரங்களுக்கு இணையாகவே பெண்ணால் பெண்ணுக்கு நேரும் துயரங்களும் இருக்கின்றன என்ற புரிதல் பெண்ணுக்கு மிக அவசியமாகிறது. அன்புக்கான தேடல் பெண்ணின் பலவீனம். அத்தேடலை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது இந்த ஆணாதிக்க சமூகம்

மூன்று வயதுக் குழந்தை முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிக் கொண்டிருப்பதற்கு, தங்குதடையின்றி ஆறாகப் பெருகி ஓடிக் கொண்டிருக்கும் மதுவின் மயக்கம் ஒரு காரணி என்றால், உலகின் கடைகோடியில் நடக்கும் வக்கிரங்களையும் உள்ளங்கையில் கொண்டு வந்து சேர்ப்பிக்கும் இணையத்தை மற்றொரு காரணியாகக் கொள்ளலாம். பெண்களின் ஆடைக்கலாச்சாரம் இதற்குக் காரணியா? என்ற விவாதங்கள் நமக்கு ஏற்புடையதாக இல்லாவிடினும், பெண்களின் ஆடை சுதந்திரம் ஆணை திசை திருப்பும் அளவில் இல்லாமல் கண்ணியம் எனும் வரையறைக்குள் இருத்தல் நலம், என்ற கருத்தும் எனக்கு உண்டு.

வெள்ளையாய் இருப்பவன் நல்லவன்... கருப்பாய் இருப்பவன் கெட்டவன்; படித்தவன் புத்திசாலி... படிக்காதவன் முட்டாள், என்பதெல்லாம் எவ்வளவு அபத்தமோ, அதே அளவு அபத்தம்... பொத்தாம் பொதுவாக எல்லா ஆண்களையும் குறை சொல்வது...

பெண்களை சக மனுஷியாய் பாவிக்கும் ஆண்களுக்கும், பெண்ணின் முன்னேற்றத்தை; நிமிர்வை; தைரியத்தை கொச்சைப் படுத்திப் பேசாமல் பெருமை கொள்ளும் பெண்களுக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்கள் சமர்ப்பணம்.

இறையச்சமும் நல்வளர்ப்பும் கொண்டு ஆரோக்கியமான இளைஞர் சமுதாயத்தை உருவாக்குவோம்...

மகிழ்ச்சி பொங்கும் மனநிலையுடன் இனி வரும் ஆண்டுகளிலேனும் இவ்வாழ்த்தைப் பகிர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.

2 comments: