Tuesday, July 25, 2017

தோழி மாதினி அவர்களின் அழகிய கருத்துகள்

கதை வாசித்தவுடன் தனது மனதில் உணர்ந்ததை உணர்ந்தவாறே பகிர்ந்து கொண்ட தோழி மாதினியின் பதிவு... மிக்க நன்றி மாதினி!

========================================================================
உங்கள் நாவலை படித்து நான் மெய்மறந்திட்டேன் பரவச நிலை தான் .... அருமையா எழுதியிருக்கீங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு மா! நடுத்தர மக்களின் வாழ்க்கை முறை அவங்க அனுபவிக்கும் இன்னல்கள் பற்றி தெளிவா சொல்லிருக்கீங்க, ஆறு மாதத்திற்கு முன்னால் நாம்ப என்னென்ன கஷ்டங்கள் அனுபவித்தோமோ அதை உங்கள் எழுத்துக்களில் படிக்கும் போது, எப்படிடா இவ்வளவு பெரிய மலையை கடந்து வந்தோம்னு ஆச்சரியமா இருக்கு! வெற்றியும் நயனியும் செம ஜோடி மா! அவன் நண்பன் தியாகு சொன்னமாதிரி வெற்றிக்காக செய்யபட்டவளோ நயனி..... வெற்றியின் குறும்பு பேச்சு அவன் அடிக்கிற லூட்டி எதையும் மறக்க முடியல.

 அவங்க திருமணம் நடக்குமோ நடக்காதோனு சஸ்பென்ஸா இருந்துச்சி மா... வெற்றி காதலை சொல்ற விதம் சூப்பர் மா "இமையும் இமையும் சேர்ந்திருப்பது போல்" நீங்க எழுதிய வரி அட்டகாசம் வார்த்தையில் வர்ண ஜாலங்கள் செய்திருக்கீங்க ஹமிதா! இப்படி நிறைய வரிகளை நான் புத்தகத்தில் குறித்து வைத்திருக்கிறேன். அனுபவித்து படித்தேன் மா...... அதுவும் லிப்ட் சீனை மறக்கவே முடியாதுமா செம! தற்சமயம் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்முறைகளையும் நீங்க விட்டு வைக்கலமா.... 

 எனக்கு முக்கோண காதல் கதைகளை படிப்பதில் பிடித்தம் கிடையாது பா அதில் யாராவது ஒருத்தருக்கு மனக் கஷ்டம் ஏற்படும் அதை என்னால் தாங்க முடியாது..... ஆரம்பத்தில் பிரோமத்தை நான் வில்லனாகவே நினைச்சிட்டேன் அதனால் தான் அவன் மேல் எந்த வருத்தமும் இல்லாமல் இருந்திச்சு ஆனால் போக போக அவனோட நல்ல மனசுக்கு நயனி கிடைக்கலியேனு ரொம்ப வருத்தமாகிடுச்சு. அவனுக்கென்று ஒரு ஜோடியை அமைச்சிருக்கலாம். இவங்க திருமணத்தை வெற்றியோட அப்பா ரொம்ப எதிர்ப்பார்னு பார்த்தால் மகனை திட்டிட்டு மருமகளை சப்போர்ட் செய்றார்.  நெஞ்சில் தாங்கும் கணவன்,தலையில் வைத்து கூத்தாடும் புகுந்த வீட்டு சொந்தங்கள் கிடைக்க தான் நயனிக்கு பிறந்த வீட்டில் அவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டதா..... 

மொத்தத்தில் "பேசும் மொழியிலெல்லாம்" என் மனதில். என்றும் நீங்கா அன்பு மொழியானது.

வாழ்த்துக்கள் ஹமிதா அருமையான நாவலை கொடுத்ததற்க்கு!
=========================================================================

தோழி எழுத்தாளர் சுதா ரவி அவர்களின் விமர்சனம்

“பேசும் மொழியிலெல்லாம்” – ஹமீதா

குணாதிசயங்கள் மனிதனுக்கு மனிதன் மாறுபடும். அவன் வாழும் சூழலும், வளர்க்கப்படும் சூழலும் அவனது எண்ணங்களை, குணத்தை நிர்ணயிக்கும். ஒரே தாயின் வயிற்றில் பிறந்தாலும் நல்ல மனிதர்களை சுற்றி வளர்ந்தாலும் கூட சிலரின் குணங்கள் வேறாக இருப்பதுண்டு. இப்படிப்பட்ட பல முகங்களை தனது கதையில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதோடு இன்றைய பிரச்சனையான டீ-மானிட்டைசேஷேன் பற்றியும் மக்களின் குரலாக பதிவு செய்திருக்கிறார்.

வெற்றி தஞ்சாவூரை பிறப்பிடமாக கொண்டவன். ஒரு சராசரி ஆணாக படிப்பு கிடைத்த வேலை என்றில்லாமல் தன் மனதிற்கு பிடித்த வேலை செய்ய வேண்டும் என்று காத்திருந்து, அதன் காரணமாக தந்தையின் வெறுப்பை சம்பாதித்துக் கொண்டவன்.

வெறும் காத்திருப்பு மட்டுமன்றி முயற்சி செய்து அதில் தோல்வியை தழுவியதால், தன் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவன். வேலையில்லாத ஒரு ஆண்மகன் தன் வீட்டில் எவ்வாறெல்லாம் நடத்தபடுவானோ அவ்வாறே தனது வீட்டில் நடத்தப்படுகிறான் வெற்றி.

நயனி ஒரு சராசரி மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்தவள். அப்பா மோகன்ராம் வேலை பார்க்கும் அதே நிறுவனத்தில் வேறு கிளையில் வேலை பார்க்கிறாள். கார்த்திகா சுயநலத்தின் தலைவி. நயனியின் தமக்கை. தன் குடும்பத்தை பற்றியோ, குடும்ப சூழ்நிலையை பற்றியோ கவலைபடாமல் தன்னலத்திற்காக அவர்களை மேலும் கஷ்டத்தில் தள்ளிவிட்டு திருமணம் முடித்து செல்கிறாள்.

கார்த்திகாவின் திருமணத்திற்காக தனது படிப்பை பாதியில் விட்டு தந்தை வேலை செய்யும் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்திருக்கிறாள் நயனி. அவளின் திருமண செலவிற்காக வாங்கிய கடன் முழுவதும் நயனியின் சம்பளத்தில் அடைபடுகிறது. தனது கனவுகள், ஆசைகள் அனைத்தையும் மனதிற்குள் புதைத்துக் கொண்டு வலம் வருகிறாள்.

குடும்ப சூழலை கருதி தந்தையின் நண்பரின் நிறுவனத்தில் வேலைக்கு சேர வெற்றி சென்னைக்கு வருகிறான். நயனி வேலை செய்யும் கிளையில் அவளுக்கு கீழே பணியில் அமர்கிறான். இதுவரை தனது வாழ்க்கையின் குறிக்கோளாக மனதிற்கு பிடித்த வேலையை மட்டுமே எண்ணி இருந்தவனுக்கு நயனியின் மீது ஈடுபாடு வருகிறது.

அவன் சென்னைக்கு வந்து சேரும் போது அரசாங்கத்தில் நடக்கும் சில குளறுபடிகளால் பிரச்சனை ஏற்பட்டு நயனியின் தந்தை மூலம் உதவி கிட்டி அவர்களின் அபார்ட்மென்ட் வளாகத்திலேயே வீடு எடுத்து தங்குகிறான்.
அந்த குடியிருப்பு வளாகத்தின் சாபக்கேடாக லிப்ட் இருக்கிறது. எந்த நேரமும் வேலை செய்யாமல் அனைவரையும் படுத்தி எடுக்கிறது. ஆரம்ப நாட்களில் இருவருக்குள்ளும் நல்ல நட்பாக இருப்பது, காதலாக மலரத் தொடங்குகிறது.
இருவரும் மனதை திறக்கவில்லை என்றாலும் ஒருவரின் மனதை ஒருவர் நன்றாக அறிவர்.

இதன் நடுவே நயனியின் குடும்பத்திலும் பல்வேறு குழப்பங்கள், நிறுவனத்திலும் ஓனரின் மகனான ப்ரமோத் பொறுப்பை ஏற்க வருகிறான். ப்ரமோத் செல்வந்தர் வீட்டுப் பிள்ளையாக வளர்ந்தவன் .அவனது நடத்தையால் அவனை அறிந்த இடங்களில் எல்லாம் பெண் கொடுக்க மறுப்பு தெரிவிக்கின்றனர்.

விருப்பமில்லாமல் முதலில் பொறுப்பேற்கும் ப்ரமோத், சிறு வயது தோழனான வெற்றியுடன் இணைந்து நிர்வாகத்தை சீராக கொண்டு செல்கிறான்.முதலில் நயனியின் மீது ஆர்வம் ஏற்படாமல் இருந்தவன், மெல்ல அவளின் இயல்புகளில் தொலைந்து போகிறான்.
வெற்றி நயனிடம் காதல் சொல்லும் இடம் சும்மா ஸ்கோரை அள்ளுரடா...அதை ஹமீதாக்கா சும்மா கவிதை நயமா சொல்லி இருப்பாங்க பாருங்க( அக்கான்னு சொன்னது ரவுண்டு கட்ட கூடாது). காதல் ஒருபுறம் ப்ரமோதின் குறுக்கீடு ஒருபுறம் என அவர்களை சுற்றி பல்வேறு தடைகள் எழ..கடந்தார்களா அவற்றை? வென்றார்களா தங்களின் காதலில்? படித்து பாருங்கள்....

எந்த லிப்ட்டை கரிச்சு கொட்டினானோ அந்த லிப்ட் தாசனாகவே மாறி போன வெற்றி...(அவனுக்கு அங்கே கிடைத்த பரிசுகள் அப்படி)...அடுத்து அந்த ட்ரைன் சீன்...ஹமீதா மேடம் சும்மா பின்றீங்க போங்க...

பணம் ஒன்றே வாழக்கையல்ல என்பதை நயனியின் வாழ்க்கை மூலமும், கார்த்திக்காக போன்ற அற்ப பிறவிகள் வாழும் இடத்தில் வெற்றி போன்று ஒரு சிலரும் இருக்க தான் செய்கிறார்கள் என்பதை தனது அழகான பாணியில் சொல்லியிருக்கிறார்..சமூக நோக்கோடு இன்றைய பிரச்சனைகளை பலவற்றையும் தொட்டு செல்கிறார்....வாழ்த்துக்கள் ஹமீதா!

Saturday, July 15, 2017

புத்தக வெளியீடு





வாசக நெஞ்சங்களுக்கு அன்பு வணக்கம்.

வரும் ஜூலை 22-ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியில், உங்கள் அனைவரின் மனம் கவர்ந்த "பேசும் மொழியிலெல்லாம்..." நாவல், மெரினா புக்ஸ் அரங்கில் வெளியிடப்படுகிறது.

என்னுடைய ஒவ்வொரு முயற்சிக்கும் உந்துசக்தியாக விளங்கி, ஊக்கமும் உற்சாகமும் வழங்கும் இனிய நட்புகள், முகமறியா முகநூல் நட்புகள், எழுத்தாள மற்றும் பதிப்பாளத் தோழிகள் அனைவரும் இந்த சந்தோஷ நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புகூர்ந்து அழைப்பு விடுக்கிறேன்.

 நான் எண்ணாததையும் ஈடேற்றிக் கொடுக்கும் ஏக இறைவனுக்கே புகழனைத்தும்!

ஸ்டால் எண் மற்றும் விவரங்கள் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படும்.

நன்றி.

அன்புடன்
S. ஹமீதா.